Posts

அலைகள்

இத்தனை யுகங்களாய்  இந்த அலைகள், கரைகளோடு  அப்படி என்ன தான் பேசுமோ? இப் பொறுப்பற்ற மாந்தர் தம்  செயல் கண்டு அவை கண்ணீர் விடத்தானோ  இல்லை, தம் இலக்கு நோக்கிய கேள்வியுடன் தானோ  எங்கோ பிறந்து  எங்கிருந்தோ விரைந்து  இன்று, இக் கரைகளோடு  பேசிமகிழ்கின்றன, அலைகள்  இத்தனை காலமாய்,  தம் உடன் பிறந்த நீரினங்களை அழைத்து, ஒரே திசையில்  உழைக்கின்றன அலைகள்  கடல்களின் வசீகரம் அலைகள், பலவற்றை கற்பிக்கின்றன அலைகள்.

உலக அதிசயங்களுள் அழகு.

Image
பிறப்பு, இறப்பு  வாழ்தல், வீழ்தல்  உண்ணல், உறங்கல்  அனைத்தும் அதிசயம்  சாய்ந்து நிற்கும் பைசா ஓர் அதிசயம்  உடைந்திருக்கும் கொலோசியம் ஓர் அதிசயம்  சாய்ந்து, உடைந்து, நெளிந்து, வளைந்து  நீண்டு நிற்கும்  அனைத்தும் அதிசயம்  இலங்கை சீகிரியா, ஒரு  அரும் பெரும் கோட்டை  கலை வளர்த்த கோட்டை - இன்று  மாந்தர் கட்டி மகிழ்ந்தனரோ  சோழ தஞ்சை பெரிய கோவில்  தமிழ் வரலாறு சுட்டும் கோவில்  இத்தனை அதிசயம் உலகில் இனி  அமைக்கும் சக்தி எங்கும் உளதோ.  உயிர் தரும் மூச்சு அதிசயம்  பசியாற்றும் உணவும் அதிசயம்  கனவு தரும் உறக்கம் அதிசயம்  வெற்றி தரும் கல்வி அதிசயம்  காலை விரியும் பூக்கள் அதிசயம்  தேடி வரும் வண்டும் அதிசயம்  மலையுணரும் பூச்சிகள் அதிசயம் - அதன்  கூட ஒளிரும் விளக்கும் அதிசயம்  இயற்கையே! அற்புதங்கள் கோர்த்தெடுத்த  அதிசயச் சுரங்கம் நீ….. பார்க்க, நுகர, கேட்க தெவிட்டாத  அதிசய பேழை நீ….. ஆனால், மானுடம் சமைத்த அதிசயங்கள்  ஒருசில தான்.

நான் ஒரு அப்பா...

Image
இன்று போல் உள்ளது அன்று, கண் திறக்ககூட தென்பில்லாமல் அழுகை தவிர வேறேதும் அறியாமல் ஐந்து வினாடி முன் பூத்த பூவாய் என் நெஞ்சில் பிஞ்சுப்பாதம் பதிய   என்ன இதழ்கள் அவை, செங்கமலமே பொறாமைப்படும்   கண்கள், கண்களே அல்ல, தேன் குவளைப் பூக்கள்   கொள்ளை அழகு கொள்ளை அழகு கண் பிரித்திட முடியா கொள்ளை அழகு   அழுகையும் மகிழ்ச்சியும் ஒரே விகிதத்தில் பொத்துக்கொண்டு கண்ணீர் மட்டுமே ஒரே மொழியாய்   சிறிதின் பின்,   பிஞ்சுக்கரம் கொண்டு என்னை அழைத்து நச்செனக் கொடுப்பாள் ஒரு முத்தம் என் நாடிநாளம் கடந்து உயிர்நாடி தொடும் அதன் உஷ்ணம்   பொய்யாய்க் கோபம் கொண்டு உன்மையில் அழுகையில் அவளின் கன்னம் என் கரத்தில் விழிநீர் களைந்து எறிவேன் கணத்தில்   பள்ளியில் அவள் தன் நண்பர்கள் காண்கையில் அவர்களோடு இவள் தன் கூடல் காண்கையில் சிறிதே கொள்கிறேன் துன்பம் - அவள் எனைப்பிரிவாளோ எனும் அச்சம்   அதோ போகிறாள் தன் கனவு நோக்கி என் கரம் பிரித்து விமானத்தின் பிடியில்   ஏதோவொரு சுனாமிக்கான ஆயத்தம் என் நெஞ்சில்   இதோ வருகிறாள் அன்று பறந்தவள்

நிலா

Image
இருட்டின் ஒளி நாயகன் பாலை ஒத்த நிறமவன் குன்றும் குழியும் நிறைந்தவன் - எனினும் என்றும் ரசிக்கத் தகுந்தவன் நான் செல்லும் பாதையெங்கும்  என் கைவிரல் கோர்த்து மரக்கிளையில் ஒழிந்து மறைந்து விளையாடிவரும் ஒரு இனிய தோழன் நீ சற்றே நீர் சுரந்தால் - மற்றும் வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்தால் உன் மடியிலே தவழத் துடிக்கிறோம் விஞ்ஞானம் வளர்த்த பூலோகவாசியினர் தூரத்தில் இருந்தால் ரசிக்கும் மாந்தர் உன்னிடம் வந்தால் மறப்பார் என்றோ அஞ்சுகிறாய், பால் நிலவே மழலையில் தாயாய் வளர்கையில் தோழனாய் - பதின்ம வயதினில் காதலனாய் - பின் என்றும் பிரியா வாழ்க்கைத்துணையாய் என் வாழ்க்கைப் பக்கங்கள் முழுவதிலும் நீயே தேய்ந்து வளர்ந்து நிறைகிறாயே!

வர்ணங்கள்

Image
பிரம்மன் படைப்பில்  சிறந்தன வர்ணங்கள்   வான்  நீலம் கொண்டு  தன்னிறம்  மாற்றி  கடல் கொள்கிறது நீலம்  சிறிதே பச்சை சேர்த்து  சமைக்கின்றன இலைகள்  மூலங்கள் சேர்க்கை  எத்தனை ஜாலமோ  நிறங்கள் சேர்க்கையில் - சற்றே  கோபம் கொண்ட இறைவன்  முள்ளோடு சேர்த்து  சிவப்பைப் படைத்து  முள்ளைக்கிள்ளி கறுப்பில் படைத்து - அக்  கறுப்பும் சற்றே வெள்ளையுறக் கண்டவன்  சிறிதே பொன் தூவி  வாழ்த்தி அதனை  தலைதன் உச்சியில்  பிரதிஷ்டை செய்து சற்றுக்கீழே இரு அணைகள் அமைத்து  இடையே இரு குளங்கள் கட்டி - அவை  பலவர்ண நிறங்களில்  ஜொலிக்கக்கண்டவன் - அவனே  பிரமித்துப் போனான் பிரம்மதேவன்  பெண்களை படைத்து  கோலத்தில் வர்ணமிட்டான்  மழலையைப் படைத்து  உலகிற்கே  நிறமளித்தான்  வர்ணங்கள் வாழீ

மேகங்கள்

Image
வான் அடி  மேகங்கள் அடையத் துடிக்கும் கால்கள்  வரையத் துடிக்கும் விரல்கள்  ஆனால், என்னைக் கண்டு அவை - அலைந்து  பறந்து மறைந்து போவதேனோ? மனதில் துடிக்கும் எண்ணங்களே மேகங்களாய்  சேர்ந்து, திரண்டு, வளைந்து, நெளிந்து  பஞ்சுக்குவியலாய் வானை நிறைத்து, அப்பாலுக்கப்பாலாய், அண்டம் பரந்து  எண்ணச்சிறகுகள் களைத்து  தளர்ந்திடும்வரை  வளைந்து வளைந்து  எண்ணங்களே வண்ணங்களாய்  பேரண்டம் பரவிடும்  மேகக்கூட்டம்  எண்ண மேகம் மனதிலும்  செந்நிற மேகம் நிஜத்திலும்  விரிக்கிறேன் எண்ணச்சிறகினை  அண்டம் கடந்து பறக்கும் ஆவலுடன்.

தனிமை

Image
 புடைசூழ பலர் இருந்தும்  நெஞ்சில் விரியும் உணர்ச்சி - தனிமை  அமைதி வாய்ந்த  சிந்தனைச் சுரங்கம் - தனிமை  பாடல்கள் பாடங்களாய்  மனதை நிரப்பும் நொடி - தனிமை  மகிழ்ச்சி பூரிப்பில் சிகரம் பறக்கும் - தனிமை  எம்மை, முன் தள்ளி இலக்கை அடையத் தூண்டும்  கனம்மிகு ஆயுதம் - தனிமை  நண்பன், பகைவன்  யாவையுமாய் உறையும் - தனிமை இளமை, முதுமை, வறுமை, பகைமை  அனைத்தையும் கரைத்திடும் ஆயுதம் - தனிமை  தனிமை கவலையல்ல, களிப் பெருக்கு  தனிமை கோபம் அல்ல, சாந்தத்தின் விம்பம்  எழுந்திடு தோழா! தனிமையில், தனியாய் நீராட  எழுந்திரு, விழித்திரு, தனித்திரு  மகிழ்ந்திட.